மீண்டும் ஒரு தீபாவளி

நகர்ந்து கொண்டிருக்கும் நாட்களில் மீண்டும் ஒரு தீபாவளி
அகந்தை அழிந்ததின் அடையாளமாய் நாமெல்லாம் கொண்டாடிடும் தீபாவளி
மகிழ்ந்தே இந்தியரெல்லாம் நாடெங்கும் ஒன்றாய் கொண்டாடிடும் தீபாவளி
தகர்ந்தே போகட்டும் நமைவாட்டும் துன்ப மெல்லாம் இத்தீபாவளி

நரகதுயரில் மக்களை தள்ளிய நரகாசுரன் அழிந்ததால் இத்தீபாவளி
வரம்பல இறைவன்தர தீபமேற்றி பூஜிக்கும் நன்னாள் இத்தீபாவளி
சுரமாய் சந்தோசம் ஒருமித்து எல்லோர்க்கும் தரும் தீபாவளி
சிரம்முதல் அடிவரை எண்ணெய் தேய்த்து குளிப்போம் இத்தீபாவளி

அரக்கன் அழித்து பயத்தை கழைந்ததால் வந்தது இத்தீபாவளி
இரக்கம் மனதில்கொண்டே வாழ்வில் சிறக்க சபதமேற்போம் இத்தீபாவளி
பரணில் ஏற்றி வைப்போம் வீண் பயத்தை இத்தீபாவளி
தரணியெங்கும் புத்தாடை தரித்து பவனி வருவோம் இத்தீபாவளி

தீபஒளியேற்றி தீர்ந்தது அரக்கன் தொல்லையென்று கொண்டாடிடும் தீபாவளி
சாபமாய் வளர்ந்துநிற்கும் சாதி கொடுமைக்கு தீவைப்போம் இத்தீபாவளி
அபத்தமான மூடப் பழக்கங்களை தீயிலிட்டு தீபமேற்றுவோம் இத்தீபாவளி
உபயம்செய்தே இன்னல் தீர்த்து ஏழைவாழ்வில் தீபமேற்றுவோம் இத்தீபாவளி

அரக்கன்தந்த துன்பம் தீர்ந்ததென்று வெடியிட்டு கொண்டாடிடும் தீபாவளி
இரக்கமற்ற கொடியவர் வெடிவைத்து மக்கள் உயிர்குடிக்கும் நிலையறுத்து
கரங்கள் கோர்த்து கொடியோரின் வேரருக்க வெடிவைப்போம் இத்தீபாவளி
தரணியெங்கும் துஷ்டர்கள் ஒளிக்க சபதமேற்று கொண்டாடுவோம் இத்தீபாவளி.

ஃஃஃ

(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)

தீபாவளி

தீபாவளி

கடைகள் பல ஆய்ந்து
புத்தாடை எடுத்தாச்சு…

மளிகை பலவகையும்
பலகாரம் செய்ய வாங்கியாச்சு…

சிவகாசி பட்டாசும்
வகைக்கொன்றாய் வாங்கி நிறைச்சாச்சு…

ஆனாலும்,
தீபாவளி நன்நாளில்
என்றோ இறந்த நரகாசுரனை நினைந்து
சந்தோசித்து புத்தாடை தரித்து
வாய் ருசிக்க பலகாரவகை உண்டு
வெடிவெடித்து மகிழ்வதா?…

தினம் தினம் வெடிவைத்து
ஏதுமறியா அப்பாவிகள் உயிர்குடிக்கும்
பாவிகள் செயல்கண்டு துடிப்பதா?…

மனசெங்கும் ஏக்கங்கள் நிறைஞ்சாச்சு
ஏதுமறியா பேதையைப்போல்
எம்மனசும் திகைச்சுப்போய் நின்னாச்சு.

ஃஃஃ
(மாலை முரசு(திருச்சி, தஞ்சை) – தீபாவளி சிறப்பு மலரில் 24.10.2008 பிரசுரிக்கப்பட்ட எனது கவிதை)

பரத்தையர்.

அவளொரு வேடந்தாங்கல்
வந்தவரெல்லாம் பறவைகளாய்
தங்கிச் செல்வதால்.

அவளொரு சுமைதாங்கி
கடந்து செல்வோரெல்லாம்
பாரத்தை இறக்கிவைப்பதால்.

அவளொரு தடாகம்
தாகப்பறவைகளாய் ஆண்கள்
காமம் தணித்து செல்வதால்

அவளொரு பாலைநிலம்
பரிவென்ற தென்றல்
வாழ்வில் வருடிச்செல்லாததால்.

அவளொரு பனிப்பிரதேசம்
வசந்தத்தின் தளிர்கள்
வாழ்வில் துளிர்க்காததால்.

அவளொரு இலையுதிர் காலம்
உற்றார் உறவினர் உதரித்தள்ளி
ஒற்றைக் கொம்பாய் நிற்பதால்.

அவளொரு மத்தளம்
வாழ்வின் எல்லாப் பக்கங்களிலும்
துயரத்தின் அடிகளை தாங்குவதால்.

அவளொரு கந்தல்துணி
தவறை யார்செய்த போதிலும்
முள்ளில்விழுந்த துணியாய் பாதிப்படைவதால்.

அவளொரு மிதியடி
பயன்படுத்தி பின்
தூக்கி யெரியப்படுவதால்.

அவளும் ஓர்
உயிருள்ள உணர்வுகளுள்ள பெண்
எப்போதிதை நாமுணர்ந்து மதிப்பது?!…

ஃஃஃ

புரட்ச்சிப் பூக்கள் மலரட்டும்.

ஆறறிவு மனிதன்
ஓரறிவு குறைந்து
ஆட்டு மந்தையென
ஆகாதார் பின்செல்லும்
மடமை ஒழிந்திட
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

பணத்தில் மோகம்கொண்டு
பாசம் துறந்துநின்று
பகைமை வளர்க்கும்
பாதக உள்ளம் நீங்கி
பசுந்தளிரென பாசம் வளர்க்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

உள்ளத்தில் குறுகி
உற்றாரோடு பகைவார்த்து
உறவினரை ஒதுக்கிவாழும்
ஊன உள்ளம் நீக்கி
உலகமதை நேசித்துவாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

சொந்தமற்ற பொருள்
சொந்தமாக்கிக் கொள்ள
சிந்தை பிறழ்ந்து
சீர்கெட்டு வாழும்
சிறுவாழ்வு துறந்து சிறக்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

கடமையை மறந்து
கள்வனைப் போல்
கண்டவரிடத்தும் பொருள்பறிக்கும்
கயமை உள்ளம் கனிந்து
கண்ணியமாய் வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

துன்மதியோர் செயல்கண்டு பயந்து
துன்பத்தில் தோய்ந்து நடுங்கும்
துயரநிலை களைந்து
துணிவாய் தலைநிமிர்ந்து
துலாபாரமாய் நாளும் வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

பாசத்தை பாலாக்கி
பசிபோக்கி வளர்த்த
பாச தெய்வங்களை வெறுக்கும்
பச்சோந்தி மனதைமாற்றி
பாசப்பிள்ளைகள் நாங்களென்று காட்ட
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

தன்னலம் கொண்டு
தரணி நலன்மறந்து கருமியாய் வாழும்
தற்குறி எண்ணம் மாற்றி
தாயாய் எல்லோர்க்கும்
தந்துவாழும் வாழ்வு வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

உயர்வு தாழ்வு பேதமை
உள்ளத்தில் வளர்த்து
உலகமக்களை பிரித்துப் பார்க்கும்
உதவாத எண்ணமகற்றி
உத்தமராய் யாவரையும் ஒன்றாய்ப்பார்க்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

சாதிகள் பலபேசி
சண்டைசெய்து சிறுத்துமாயும்
சாக்கடை வாழ்வு அகற்றிட
சபதம் மனதில் ஏற்று
சான்றோராய் சிறக்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.

மதங்கள் கூறும்
மாட்சிமை மறந்து
மானிடம் துறந்து
மதம்பிடித்து சண்டையிட்டு மாயும்
மனங்கள் மாற
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்..

ஃஃஃ

கண்கள் – ஹைகூ

வலைகளில் விழுவதற்கு மட்டுமல்ல
வலைவீசவும் தெரியும் மீன்களுக்கு!…
பெண்களின் கண்கள்.

ஃஃஃ

இலையின் பயணம் – இன்னொரு ஜனனம்.

இரவின் பனியை உண்டு
இன்புற்றிருந்தது இறுதி நாளின்
பயணத்தை எண்ணி;
உதிரப்போகும் சருகொன்று…
இன்பம் தானா உதிர்வதில்?!…

துளிர்த்ததுமுதல்
உதிரும் நாள் வரை உழைத்தாகிவிட்டது…
உயிர்கள் சுவாசிக்க ஆக்சிஸனை
கொடுத்தாகிவிட்டது…

உதிர்தலென்பது உயிர்விடலா?!…
இல்லையில்லை…
இலையின் வாழ்க்கை சுழற்சின்
இன்னொறு பக்கம்…

கிளையொடு ஒட்டிய உறவுகள் முடிந்து…
ஊட்டம் கொடுத்த
பூமியோடு உறவாட
இனிப் புதுப்பயணம்…
இன்னொறு ஜனனம்…

பயணத்தின் பாதை தீர்மானிக்க
இலைக்கு ஆசைதான்…
முடிக்கும் வல்லமை காற்றின் கைகளில்!…

உதிரும் வேளை..
இதமாய் வருடிச்செல்கின்றது தென்றல்…
பழகியநாட்களின் பரிவு
தென்றலின் குளிர்ச்சியில்…
இனியிருவரும் தொடுதல் சாத்தியமோ?!…

தாயின் கருவறைவிட்டகலும் சேயாய்
காம்பைவிட்டகலும் முதிர்ந்த இலை…
இது இன்னொரு ஜனனம்…
பாதை தீர்மானித்து
மெல்ல பறக்கின்றது
மரத்தின் பாதம்தொட்டு
புதுப்பயணம் தொடங்க…

விதியின் கைகள் வலியது…
இதுவரை வருடிச்சென்ற காற்றின் கைகள்
இப்போது வலியதாய்…
திசைமாற்றி தூக்கியெறியப்படும் இலை…
இலையின் திசையை காற்றே தீர்மானிக்க
இலையின் பயணம் இனி எங்கெங்கென்று
யார் அறிவார்?!…

ஃஃஃ

இளம் சூரியன்…

இளம்சூரியன் நீ உனைமறந்து வீணே சுழல்கின்றாய்
வளம்நிறைந்த நின்சிந்தனையை வீணே சிறகொடிக்கின்றாய்
களம்காண போலிப் பயம்கொண்டு சுணங்கித் திரிகின்றாய்
இளையபாரதத்தின் மணிமகுடம் நீயென்பதை ஏனே மறக்கின்றாய்

திரைகளுக்கு முன்னே மண்டியிட்டு பிறைநிலவாய் குறைகின்றாய்
கரைபட்ட மனிதனையும் தலைவனென்று போற்றி ஏற்றுகின்றாய்
மரைகழன்ற அறைகுரைக்கும் அரசியல் சாயம் பூசுகின்றாய்
அரசாள அர்ப்பனுக்கு வாக்களித்து அரியணை ஏற்றுகின்றாய்.

தினவெடுத்த தோள்கள் இருந்தும் கனவுகளோடு உழல்கின்றாய்
மனவழுக்கில் தோய்ந்து சிரம் தாழ்ந்து வாழ்கின்றாய்
இனமக்கள் நேசம்கூட பண மதிப்பில் பார்க்கின்றாய்
கனவுகள் காலத்தைவெல்ல உதவாதென்பதை ஏன் மறக்கின்றாய்?

இனி மறைந்து போகட்டுமுன் சிறுமைகள் அத்தனையும்
நனி சிறந்து தழைக்கட்டுமுன் பன்முக திறமைகள்
கனியென நல்லோர்க்கு பயனாகட்டுமுன் நல் வினைகள்
கனலென கனன்று துகளாக்கட்டும் தீயோரை உன்செயல்கள்.

ஃஃஃ

அப்பாவிற்கு இரண்டாம் ஆண்டு நினைவஞ்சலி கவிதை.

அப்பா

அப்பா!
சிறுவயதில் உல்லாசமாய்
உன் தோள்மீது அமர்ந்து
ஊர் சுற்றிப் பார்த்ததும்

எங்களுக்கு காய்ச்சல் கண்டபோது
உடல் சூடு தணிய
உன் மார்பை
மெத்தையாக்கிய தருணங்களும்

வாலிப வயதில்
உலகவிசயங்களை தர்க்கம் செய்து
வாதிட்ட தினங்களும்

உன் வயோதிக காலத்திலும்
உற்றாருக்காகவும்
ஊருக்காகவும் ஏங்கித்தவித்த
உன்னோடு இனி
தர்க்கம் செய்யமுடியாத இடத்திற்கு
நீ சென்றிருந்தாலும்

நீ விட்டுச்சென்ற நினைவுகளும்
எழுதிவைத்து அச்சில் ஏற்றாமல்
விட்டுச் சென்ற கவிதைகளும்
உன்னை நினைவு படுத்தமட்டுமல்ல
உன் நினைவோடு
விவாதம் செய்யவும் செய்கின்றது.

இரண்டாண்டு மட்டுமல்ல
இரண்டாயிரமாண்டு ஆனாலும்
நினைக்கப்படுவாய்.
நீ மனிதன் மட்டுமல்ல கவிஞனுமல்லவா?…
உன் கவிதைகள்
உன்னை வாழவைக்கும் என்றும் உலகில்.

ஃஃஃ

திசைகள் – சிறுகதை.

‘பாட்டி உனக்கு தான் வயசாகிப்போச்சே, இந்த வயசுல உனக்கு என்ன இனிப்புல இவ்வளவு ஆசை. என்னை தொந்தரவு செய்யாம சீக்கிரம் செத்து தொலையேன். ஒரு சனியன் ஒழிஞ்சதா நினைச்சு நிம்மதியா இருப்பேன்’, அக்கினி பிளம்புகளாக துவேசம் கலந்து வார்த்தைகளை அள்ளி வீசிய நீலாவுக்கு பதினெட்டு வயது. கல்லூரியில் முதலாமாண்டு தன் மாமா வீட்டிலிருந்து படித்துக்கொண்டிருநதாள்.

‘நீ என்னை மட்டுமா வளர்த்த, புனிதாவையும் சேர்த்து தானே வளர்த்த. அப்புறமேன் என்கிட்ட மட்டும் அத கொண்டா, இதக் கொண்டாண்ணு நச்சரிக்கிற…’

கட்டிலில் படுத்திருந்த பாட்டிக்கு நீலாவின் பேச்சு தேள் கொட்டியது போல் இதயத்தில் வலித்த்து. ‘இந்த வார்த்தையை முடியாத காலத்தில் கேட்பதற்காகவா உங்களையெல்லாம் பொத்திப் பொத்தி வளர்த்தேன்’, பாட்டி மனதிற்குள் புழுங்கினாள்.

பாட்டி எதையோ சொல்ல வாயெடுக்க அதைக்கேட்காமலேயே நீலா அடுத்த அறைக்குள் புகுந்து கதவை ‘பட்’ டென்று சாத்தினாள்.

நீலாவின் வார்த்தைகள் பாட்டியின் தலைக்குள் மேகக் கூட்டமாய் சூழந்து வட்டமிட்டு பாரமேற்ற பழைய நினைவுகள் அமில மழைத்துளியாய் மனதில் விழத்தொடங்கின.

நீலா, பாட்டியின் மகள் வயிற்று பேத்தி. புனிதா, மகன் வயிற்று பேத்தி. மகன் வீட்டிலேயே பாட்டியும் நீலாவும் இருந்தனர். புனிதாவிற்கும் நீலாவிற்கும் வயது அப்போது பன்னிரெண்டு இருக்கும். நீலாதான் மூத்தவள். இருவரும் ஓரிரு மாத இடைவெளியில் பிறந்தவர்கள். ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் தான் படித்துவந்தனர்.

புனிதாவின் அம்மா சுகவீனமுற்று மருத்துவமனையில் படுத்தப் படுக்கையாகிவிட, வீட்டுப் பொறுப்பு முழுவதுமாக பாட்டியிடம் வந்தது.

அது ஒரு புதன்கிழமை. பாட்டி கறிச்சோறு ஆக்கி இருந்தாள்.

பாட்டியின் கைப்பக்குவம் மிக அருமையாக இருக்கும். அதுவும் முந்திரி அண்டிப் பருப்பு போட்டு பாட்டி சமைக்கும் கௌதாரி கறிக்குழம்பிற்கு தனிச்சுவையே உண்டு.

பாட்டியின் கைப்பக்குவத்தில் சமையல் ருசியாக இருப்பதற்கு பாட்டி தனிக்கதையே சொல்வாள். தான் பச்சைப் பாம்பை உயிருடன் பிடித்து தலைமுதல் வால் வரை கைகளால் தடவிவிடுவதாகவும், அதனால் தான் தனது சமையில் பதார்த்தங்கள் மிக சுவையாக இருப்பதாகவும் கூறியிருக்கின்றாள்.

பள்ளிவிட்டு வந்த புனிதாவிற்கு பாட்டியின் கறிக்குழம்பு நாக்கில் எச்சிலை ஊறவைத்தது.

ஆனால் பாட்டி நீலாவிற்கு கறிச்சோறும் தனக்கு பழைய சோழக் காடியும் மாங்காய் தொக்கும் தட்டில் கொண்டு வைத்தபோது புனிதாவிற்கு எல்லாமே சூனியமாக தெரிந்தது.

மனம் பொறுக்காது புனிதா, ‘பாட்டி எனக்கும் கறிச்சோறு தாயேன்’ என்றாள்.

‘உன்னை பெத்த மவராசி சாவக்கிடக்கா, உன் நாக்கு கறிச்சோறு கேட்குதாக்கும். இன்னும் ரெண்டு நாளுல அவபோயிருவா, அதுக்கு பின்னாடி உனக்கு இந்த காடி கூட கெடைக்காது. இப்பவே நல்லா கொட்டிக்க’, பாட்டியின் நாவிலிருந்து முள்ளாய் வார்த்தைகள் வந்து சின்னப்பெண் புனிதாவைத் தைத்தது.

பாவம் புனிதா, தன் தகப்பனின் உழைப்பில் வந்த பலனை அனுபவிக்க முடியவில்லை. அது புரியும் வயதும் அவளுக்கில்லை. வாய்விட்டு அழுவதற்குக்கூட தைரியமின்றி வழியும் கண்ணீரை துடைத்துக் கொண்டே மனதிற்குள்ளேயே அம்மாவை நினைத்துக்கொண்டாள், ‘அம்மா இப்போது பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும். எலும்பில்லாத கறியாக எடுத்துத் தருவாளே’, புனிதாவின் மனம் ஏங்கியது.

புனிதாவின் வடியும் கண்ணீரைப்பார்த்த பாட்டி,’அழுதழுது வீட்ட உருப்படாம ஆக்கிடாத’, வெடித்தாள்.

கதவு தட்டப்படும் ஓசை கேட்டு பாட்டி பழைய நினைவிலிருந்து கலைந்தாள்.

கதவருகே புனிதா ஏதோப் பொட்டலத்துடன் நின்றிருந்தாள்.

பாட்டியின் அருகில் ஆதரவாய் வந்து, ‘பாட்டி, நீலா சொன்னதெல்லாம் நானும் கேட்டேன். கவலைப்படாதே. நான் இனிப்பு கொண்டாந்திருக்கேன். ஊட்டிவிடவா’ கேட்டுக் கொண்டே ஒரு விள்ளல் எடுத்து பாட்டியின் வாயில் ஊட்டினாள்.

பொட்டலத்தையும் பாட்டியிடம் நீட்டி, ‘இந்தா பாட்டி, இது உனக்கு தான். அம்மா செலவுக்கு தந்த காசுல உனக்கு தான் வாங்கி வந்தேன்’, என்றாள்.

பாட்டியின் முகத்தில் பழைய நினைவுகளின் ரேகைகள் இழையோடுவது தெரிந்தது. தயக்கத்தோடு புனிதா நீட்டிய இனிப்பு பொட்டலத்தை வாங்கிக்கொண்டாள்.

பாட்டியின் கண்களில் நீர் கரைபுரண்டோடியது. பழைய பாவமும் கரைந்தோடியிருக்க வேண்டும்.

* * *

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

பார்வைக் கணை…

இராமன் எரிந்த கணையோ
மெய்தனை துளைத்து
வாலியை வதம் செய்தது.

ஏந்திழையே!…

உன் பார்வைக் கணையோ
உளஉறுதியை தகர்த்து
எனை காதலால் வதைக்கின்றது.

இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »

« பழைய வரவுகள்