நன்றியுணர்வு – ஹைகூ

நன்றியுணர்வென்பது வெறும் பேச்சோ?!…
மனம் வெறுத்து புலம்பியது;
கழித்துவைத்த கறிவேப்பிலை.

* * *

காதல் சுவரம்…

என் அன்பே!
உன் பெயரை தினம் தினம்
ஓராயிரம் முறை
உச்சரிக்கவே செய்கின்றேன் – ஏன்
ஒவ்வோரு முறையும்
முதல் முறையாய் உணர்கின்றேன்…

நீ மட்டுமல்ல எனக்கு பரவசம்
உன் பெயர் தாங்கிய
ஒவ்வொரு பொருளும்…

யாரோ யாரையோ அழைக்கும் பெயர்
உனதாகிவிட்டால்
நின்று நிதானித்து
அவர் முகம் பார்த்து செல்கின்றேன்
என்னவளின் பெயர் தாங்கிவரும்
அதிசயமென்று…

காற்றின் மீது கூட
கோபம் வருகின்றது
அது உன் கேசம் கலைத்து செல்வதால்…

தென்றலின் மீது
பாசமும் வருகின்றது
அது உனை வருடி
மகிழ்வித்துச்செல்வதால்…

நீ சுகவீனப்பட்டு
உடல் தளரும் போது
துவண்டு போவது
என் மனமும் தான்…

பிரிய சகி!
எந்த கணத்தில் எதனால்
எப்படி ஈர்க்கப்பட்டேன் உன்வசம்…
விடைதெரியாமல் தான்
தத்தளிக்கின்றேன்…
காதல் வயப்பட்ட
எண்ணில்லா உயிர்களில்
நானும் ஒருவனாக…
–o0o–

காதலின் வேதம்…


காதலின் வேதம் தினம் மெருகேரும்
கனவுகள் தோறும் கற்பனை மாறும்
காவியம் போலே தினம்தினம் வளரும்
கதவுகள் ஏது தடை போடக்கூடும்

காதல் கண்ணால் பார்த்து வருவதுமுண்டு
காதால் கேட்டு நாளும் வளர்வதுமுண்டு
கனவில் கூட இணையை கண்டவருண்டு
கற்பனையாக சிலர் வளர்ப்பதும் உண்டு

நெஞ்சில் நுளைந்து நினைவில் வளர்ந்தால்
நிலையான காதலென்பேன் நாளும் வளருமென்பேன்
நித்தியயௌவநமாய் பார் புகழ மிளிருமென்பேன்
நிதியம் இதுவே வாழ்வில் என்பேன்

* * *

அருஞ்சொற்பொருள்:

நித்தியயௌவநம் – என்றும் இளமை.
நிதியம் – திரவியம், செல்வம்

எம் மருமானே…(அ, ஆ…கவிதை – 17)

அரவிந்தனே எம் மருமானே
ஆண்டு ஒன்றை கடக்கின்றாய்
இன்முகமாய் முகம்பார்த்து சிரிக்கின்றாய்
ஈசிதனாய் வளர்வாய் நீ…
உகசூரியர் மெச்சிட மிளிர்வாய் நீ
ஊற்றங்கோலாவாய் பலருக்கு நீ
எஞ்ஞான்றும் நல்லன புரிவாய் நீ
ஏனாதியாய் அறிவிற்சிறப்பாய் நீ
ஐமுகனின் பாதம் தொழுவாய் நீ
ஒட்டலர் சூது வெல்வாய் நீ
ஓங்காரம் தினம் ஓதிடல்வேண்டும் நீ
ஔதாரியம் மிகுந்து சிறப்பாய் நீ.

* * *

ஹைகூ—கொசு…, வன்முறை…

கொன்றுகொண்டு தான் இருக்கின்றேன்
உயிர்வதை விரும்பாத போதும்
கடிக்கும் கொசு…

* * *

எந்த சாமி கேட்டது?..
மனிதனின் இரத்தப் படையல்
வன்முறை…

* * *

இறைவனும்…நானும்…


ஏகாந்த வெளியில் ஒற்றை மரத்தடியில்
என்னை மறந்து அமர்ந்திருந்தேன்
ஏதேதோ நெஞ்சில் நினைத்திருந்தேன்
எவ்வளவு சென்றது காலமென்று
என்னளவில் ஞாபகம் இல்லை…
என்னுணர்வில் நானில்லை…

மலராய் தொட்டது ஒருகரம்
என் தோளில்…

யாராயிருக்கும் பிரிதொருவன்
எனைதவிர்த்திந்த ஏகாந்த வெளியில்…

மலராய்த் தொட்டவன்
குயிலாய் பதில் பகர்ந்தான்
நான்தான் இறைவனென்று…

எழுந்தது கோடி வினாக்கள் என்னுள்ளே
அழைக்கவே இல்லையே நான்!…
பிறகெப்படி இறைவனின் தரிசனம்?!…
அழைத்தவர் குரலுக்குத்தானே
வருவேனென்றான் கீதையில்….
அழையாமல் வந்த மாயமென்னவோ?…
தவறேதும் செய்திருப்பேனோ?…
தண்டிக்க வந்திருப்பானோ?…

வந்தவர் என்
எண்ணம் அறிந்திருக்க வேண்டும்
உள்ளம் உணர்ந்திருக்க வேண்டும்…

நான் உன்மீது
குறைகண்டும் வரவில்லை
குறைகூறவும் வரவில்லையென்றார்…
அத்தோடு நில்லாமல்
என்னை முழுதாய் அறிவாயா?…
என் செயல்கள் புரிவாயாயென்றார்…

இப்புவில் நான் ஜனனித்த காலம் தொட்டு
இதுவரையில் கேட்டறிந்து படித்தறிந்து
தெரிந்தவற்றை அறிந்தவற்றை மனதில் கொண்டு
சிறிதளவு வாழ்க்கைக்கு
உதவும் வகையில் அறிவேனென்றேன்…

என்பதிலில் திருப்தி
கண்டாரோ காணலியோ
நானறியேன்?…
எனைப்பற்றி
நானே உரைக்கின்றேன்
கேள் என்றார்…
பின் தொடர்ந்துறைத்தார்.

உலகத்தின் ஆதாரம் நான்
அண்டங்கள் அனைத்தும் படைத்ததும் நான்
ஆகாயத்தின் நீலம் நான்
கடலின் அலையும் நான்
உடலில் ஊனும் நான்
ஊனை இயக்குவிக்கும் உயிரும் நான்
ஒவ்வொரு மூலக்கூறும் நான்
உலகின் பொருளும் நான்
பொருட்களின் வடிவும் நான்
மலையும் நான்
மண்டி வளரும் செடியும் நான்
புழுவும் நான் புள்ளினமும் நான்
பூவும் நான் நறுமணமும் நான்
மரமும் நான் அதுதாங்கும் வேறும் நான்
கனிகள் நான் உள்ளிருக்கும் விதைகளும் நான்
கோபமும் நான் நற்குணமும் நான்
நன்றும் நான் தீதும் நான்
அமைதியும் நான் போரும் நான்
உலகத்தின் உயிர்கள் அத்தனையும் நான்
நீயும் நான் நானும் நான்
எனினும் நானென்பதை
துறந்தவன் நான் என்றார்…

புரிந்தும் புரியாததுமாய்
நான் விழித்திருக்க மேலும் தொடர்ந்தார்…
உலகத்தின் நிலைத்த சுழற்சி வேண்டி
நானே உயிர்ச் சங்கிலியைப் படைத்தேன்…
ஓர் உயிர் இன்னொரு உயிரை உண்டுவாழ
பிராப்தத்தைக் கொடுத்தேன்…
எனினும் எல்லா உயிர்களையும்
சமமாக நினைத்தேன்…
கருணையின் உருவாகவே நிற்கின்றேன் என்றார்…

இறைவெனொன்று சொன்ன பின்
அவர் சொல்லுக்கு மறுப்பென்ன
நான் சொல்ல உண்டு….
எனினும் அடியேனின் உள்ளத்தில்
வினா ஒன்று சிறு குமிழாய் எழக்கண்டேன்…

ஆண்டவனாயிற்றே
என் உளப்பாடு அறியாமலிருப்பானா?…
உன்னுள்ளத்தில் வினாவொன்று எழக்காண்கின்றேன்
தயங்காமல் கேளென்றான்…
இறைவனே கேளென்றபின்
கேட்காமலிருப்பது முறையாகுமா?
இறைவா தவறாக எண்ணவேண்டாம்
நீரே உலகத்தின் எல்லாமும் என்றீர்,
உலகத்தின் உயிர்களனைத்தும்
ஒன்றென்றும் சொன்னீர்,
கருணையின் வடிவாய் இருப்பதாகவும் இயம்பினீர்
அது உண்மையெனில்
ஊன உள்ளத்தினரை ஏன் படைத்தீர்?
சுனாமியை ஏன் கொடுத்தீர்?
உயிர்விழுங்கும் பூகம்பத்தை ஏன் தந்தீர்?
ஊனமாய் மனிதரை
ஏன் படைத்தீர் என்றேன்?

இறைவன்
மறுமொழி இயம்ப வார்த்தையின்றி நின்றானா?
வெட்கத்தால் மௌனித்தானா? நானறியேன்…

வெகு நேரம் கடந்தது
நானந்த ஏகாந்த வெளியில்
ஒற்றை மரத்தடியில்….
தனித்திருந்தேன்…
* * *

எங்களின் இரவுகள் விடியாதா…


விடியாதா… விடியாதா… எங்களின் இரவுகள் விடியாதா…
வேசங்கள் இல்லை எங்களின் நெஞ்சத்தில் மஞ்சத்தில்
வேதனை எங்களின் சொந்தங்கள் கொண்டிடும் பந்தங்கள்…
வேதங்களே சொல்லுங்கள் வாழ்க்கைக்கு வழி சொல்லுங்கள்…

சாலையோர மரத்தின் நிழலே எங்களின் வீடுகள்
சாதங்கள் முழுதாய் நிறைத்ததில்லை எங்களின் வயிருகள்
சந்தங்கள் எப்போதும் இருந்ததில்லை எங்களின் வாழ்க்கையில்
சதிகள்நிறைந்த உலகத்தில் விதியா எங்கள் வாழ்க்கை…

நிறைவாய்தானே உழைக்கின்றோம் குறைவாய் ஊதியமேன் பெறுகின்றோம்
நீதியெங்களை தொடாததேனோ நிம்மதியை வாழ்வில் தராததேனோ..
நித்திய வாழ்வில் தினம் தினம் மரணம்தான்
நினைவுகள் மட்டும் வாழுது நடை பிணமாய்…

வீடுகள் எம்முழைப்பில் தினமுயர்ந்து கோபுரத்தை விஞ்சும்
வீதியின் ஓரங்கள் தானனெனினும் தந்திடும் தஞ்சம்
விதியா…இதுவிதியா…விஞ்சிடுதே எங்களில் பஞ்சம்
விதியே காட்டாயோ எங்கள்மேல் கருணை கொஞ்சம்

ஆட்சிகள் மாறி அரசுகள் மாறிட்ட போதும்
அன்பாய் இதுவரை எம்மிடம் வந்தவரில்லை எவரும்
அரைவயிறு கஞ்சிக்கு ஏழைக்கு வழிசெய்யாத பேதம்
அரசுகள் ஆட்சிகள் இங்கே இருந்தென்ன லாபம்.

நிலைமைகள் இனி ஒருநாள் வலிந்தே மாறும்
நிலையாய் எங்களின் வாழ்வு அப்போது உயரும்
நிலைகெட்ட அரசியல் தலைகள் அப்போதெங்கே போகும்
நீதியின் கண்கள் உலகில் எப்போதுமா தூங்கும்.
* * *

தலைவரின் சிலை…

தலைவரின் சிலையில் காகமிருந்தது
ஞாபகத்திற்கு வந்தது – என்வீட்டு
உரமற்ற ரோஜாச்செடி.

* * *

அருசுவை விருந்து நினைவுநாளில்
ஏக்கத்தோடு பார்த்துக்கொண்டிருந்தார் புகைப்படமாய்
பட்டினியால் இறந்துபோனவர்.

* * *

சுதந்திரத் தென்றல்.

கன காலமாகிவிட்டது?!…
சுதந்திரத் தென்றல் நம்மைத் தழுவத்தொடங்கி…
இன்னும் ஏன் விடாப்பிடியாய்
சுவாசித்துக் கொண்டே இருக்கின்றாய்?
அடிமை நாற்றத்தை!….

அடிமைப்படுத்திய வெள்ளையன் வெளியேறி
ஆண்டுகள் அறுபதைக் கடக்கின்றது
நீ ஏனின்றும்
அடங்கியேத்தானிருப் பேனென்று
அடம்பிடிக்கின்றாய்…
அரிதார நாயகர்களுக்குப் பின்னும்
அநாகரீக அரசியல் தலைவனுக்கு பின்னும்
அடிமாடாய் அணி வகுக்கின்றாய்?!….

நொடிக்கொரு முறை,
இரவினில் சுதந்திரம் பெற்றோம்
இன்னும் விடியவே இல்லையென்று
ஒப்பாரி வைக்கின்றாய்…
வீணே புலம்பித் தவிக்கின்றாய்…

நச்சுச் செடிகளையும் பதர்களையும்
நடவு செய்துவிட்டு
நல்மணிகளை அருவடை செய்ய
நினைப்பதென்ன நியாயம்?!…

சுரங்கெட்டவர்களை மேடையேற்றி விட்டு
சுகராகங்களை கேட்கலாமென்று
சுரத்தின்றி காத்திருப்பது பாவம்!…

மணலைப்பிசைந்து கடைந்து கடைந்து
மட்பாண்டம் செய்ய முயல்வது
மதியிலார் செய்யும் மடத்தனம்!…

யார் இந்த
மக்கள் நலன் மறந்த அரசியல் வியாதிகள்…
கடமை தவறிய ஊழல் அதிகாரிகள்…
தர்மம் துறந்து உயிருக்கு விலைசெய்யும்
வியாபாரி மருத்துவர்கள்…
பத்திமார்க்கம் மறந்த காமுக போலிச்சாமிகள்…
சமூக ஒழுக்கம் ஒழுகாத சராசரி சாமான்யர்கள்?…

வானிலிருந்து வந்தார்களா?!…
வேற்றுக்கிரக வாசிகளா?!…

இல்லை…
நம் முன்னோர்
நேற்று நட்ட விச விதைகளின்
விருட்சங்கள்!…
சாக்கடையாய் வளர்க்கப்பட்ட
சாத்தான்கள்!!…

முட்களை நடவு செய்து விட்டு
முல்லைப் பூவை
அருவடை செய்யமுடியாது!…
நல்ல நெறியோடு
குழந்தையை வளர்க்காதபோது
குற்றமற்ற நாணய மனிதரை
காண்பதெவ்வாறு?!…

ஏ! என் இனிய இந்தியனே!! வா!!!
சுதந்திர தின சபதமேற்றுக் கொள்வோம்….
நம் வீட்டு குழந்தை தெய்வங்களை
கருணை, தியாக உள்ளம் கொண்டவராய்
நன்நெறி தவராதவராய் ஒழுக்க சீலராய்
உயர்நோக்கு கொண்டோராய்
வீரத்தில் சிறந்தோராய்
ஞானத்தில் பரந்தோராய்
தேசபக்தி கொண்டோராய்
வளர்ப்போம்…

நாளைய பாரதம்
பாரினில் சிறந்ததென்று
சூழுரைப்போம்…

* * *

சுதந்திர தினம்.

பாதுகாப்பு பலமாகத்தான் இருக்கின்றது
எனினும் பயமாகவே இருக்கின்றது
சுதந்திர தினம்.

* * *

« பழைய வரவுகள்