வரவேற்புகள்…

வரவேற்புகள் இப்போதெல்லாம்
வாசகங்களில் மட்டுமே
வாசம் செய்கின்றது…

மோசமான எண்ணங்களை
மனதில் சுமந்து
வார்த்தைகளில் மட்டுமே
வரவேற்பு மிளிர்கின்றது….

உதடுகளிலிருந்து
நிர்பந்தத்தால் பிறக்கும் வரவேற்புகள்
உள்ளங்களை தொடாமலேயே
தொலைந்து போகின்றது…

வரவேற்பை முன்வைக்கும் போதே
பல மனங்கள்
வரவுசெலவை கணக்குப் பார்க்கின்றது.
வரவும் செலவும்
வாழ்வில் நிலையல்ல என்பதறியாமலேயே…

இழந்த பொருளை ஈட்டிடலாம்
இழந்த மனதை ஈட்டுதல் அறிது….

உதிர்ந்த சருகுகள்
கிளை சேராது…
அறுந்த உறவுகளும்
சபை சேராது…

உறவுப் பூக்களும்
நட்பு மலர்களும் பூத்துக்குலுங்க
வரவேற்புக்களை
உள்ளத்திலிருந்து பிறக்கும்
வசந்த அழைப்புக்களாக மலரச்செய்வோம்…

* * *