கூரை ஓலை…(ஹைகூ)

புதுக் குறுத்தோலை வந்தது
பழைய மட்டை உதிர்ந்து விழுந்தது
வளரும் முதிர்ச்சி.

காவோலைக்கு கையாட்டியது பச்சைவோலை;
கவலைப்பட்டு இருக்குமோ?!…
நெருங்கும் நாட்களை நினைந்து.

சலசலத்து சண்டையிட்டது ஓலை
குறைப்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் தங்களுக்குள்
தழுவும்காற்று யாருக்கு சொந்தமென்று.

சந்தோசமாய் சம்மணமிட்டு அமர்ந்தது
உதிர்ந்த பின்னும் உயரத்திலென்று
காய்ந்த கூரை ஓலை.

கத்தியால் அறுத்து விட்டான்
கண்ணீர் வடித்தது இனிப்பாக;
பதனீர்.

ஃஃஃ

செல்ல சிணுங்கல்கள்…

தாமரைக்கண் விரித்து
ஓரக்கண்ணால் பார்த்து
பூவாய்ச் சிரிக்கின்றாய்…

முகம் கோணி
முறுவல் செய்து
சாடை பேசுகின்றாய்…

சில நேரம்
நா கடித்து
உன்கோபம் காட்டுகின்றாய்…

தென்றலாய் நெருங்குமுன்னை
தீண்ட நினைக்கையில்
புயலாய் ஒதுங்குகின்றாய்…

ஆண்டுகள் கடக்கின்றது…
உன்செல்ல சேட்டைகள்
குறையவே இல்லை…

இளமையோடு தொடரட்டும்
உன் செல்லச் சிணுங்கல்கள்
ஆண்டுகள் அறுபதை கடக்கும்போதும்…

ஃஃஃ