பெப்ரவரி 14, 2008 இல் 9:06 மு.பகல் (காதல்)
Tags: கவிதை, காதல், Kavithai, Love
தென்றலின் நேசம்
பூவிடத்தில்
வான்நிலவின் நேசம்
இரவிடத்தில்
வானவில்லின் நேசம்
மழையிடத்தில்
என்நேசமோ உயிரே
உன்னிடத்தில்.
நிரம்பிய குளம் ஒருநாள்
வற்றிப்போகலாம்
நியமனங்கள் ஒருநாள்
மாற்றப்படலாம்
காதலுக்கான நியமனநாளும்
மாறிப்போகலாம்
தமிழ் வருடப்பிறப்பு
நாள் போல.
காதலுணர்வு நியமனமற்ற
இதயத்தின் கீதம்
காதல் இயற்கையானது
பகலும் இரவும்போல;
மனதில் கவலைமறந்து
நாளும் கழிப்போம்
மலரும் நாளனைத்தும்
காதலுக்கான நாளென்று.
ஃஃஃ
5 மறுமொழிகள்
பெப்ரவரி 13, 2008 இல் 11:23 பிற்பகல் (உணர்வுகள், கல்லூரி நாட்களில்)
உலகத்தின் மாந்தர்காள்- ஓர்
உண்மை கேளீரோ!…
உலகம் மக்கள் மற்று
உயிர் அனைத்தும்
இறைவன் படைத்தானாம்!…
ஓங்கி உயர்ந்த குன்றம்;
உள்ளம் கொள்ளைகொள் அருவி;
அன்னமென அசையும் பெண்டீர்;
காலை இளம் பரிதி, தென்றல்
யாவும் இறைவனே படைத்தானாம்!…
அழகனைத்தும், அறிவும்
படைத்த இறைவன்
துன்புற்று மாயும்
கூன், குருடு, நொண்டி, முடம்
யாவரையும் ஏன் படைத்தானாம்?…
பள்ளி பாடமதை
பரிட்சை நேரம் மறந்து போம்
மாணாக்கன் போல்
பிரணவத்தை அடிக்கடி மறப்பானோ
மனிதரை படைக்கும் போது…
இறைவன்?!…
ஃஃஃ
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருத்துத் தெரிவிக்கவும்
பெப்ரவரி 13, 2008 இல் 10:59 பிற்பகல் (கல்லூரி நாட்களில், சமுதாயம்)
Tags: ஆசை, கவிதை, greedy, Kavithai
ஆசைக்கு அளவுண்டோ அளக்க புதுக் கோலுண்டோ
ஆசை பொன்மேற் கொண்டு ஆண்டவன்சிலைத் திருடுகின்றார்
பணம்மேல் ஆசை கொண்டே பச்சோந்தி ஆகின்றார்
பிணம் தின்னும் கழுகாக உலவித் திரிகின்றார்
நாகரீக ஆசை கொண்டே நஞ்சைக் கலக்கின்றார்
நகர்வலம் திரியும்போது காணும் பொருளுக்கு ஏங்குகின்றார்
பெண்மேல் ஆசை கொண்டே பித்தராகி அலைகின்றார்
பண்புகெட்டே கால மெல்லாம் பாரில் உலவுகின்றார்
காணும் பொருளுக்கு ஆசைகொண்டு அலையும் மாந்தரே
கணநேர ஆசை யகற்றி மலையென உயருங்கள்
அஞ்ஞான ஆசைதனை ஆண்டவன் அருள்கொண்டு ஒழித்து
மெஞ்ஞான அருள்பெற்றே மேன்மை எய்துங்கள்.
ஃஃஃ
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருத்துத் தெரிவிக்கவும்
பெப்ரவரி 13, 2008 இல் 8:54 மு.பகல் (இயற்கை, ஹைகூ)
Tags: கலை அரசன், கவிதை, காளான், ஹைகூ, Haiku, Kalaiarasan, Kavithai, Mushroom
வீடு கட்ட மரம் வெட்டினார்
வேறுமரம் தேடி பறந்தது பறவை
கூடு கட்டி குடியிருக்க.
ஃ
அனாதையாக தெருவில், உதிர்ந்த முடிகள்;
தத்தெடுத்துக் கொண்டன பறவைகள்
மெத்தையாய் கூடுகளில்.
ஃ
எதிர்பார்ப்பில்லாத தாய்மை உணர்வு
அலகோடு அலகுவைத்து உணவூட்டியது பறவை
கூடுவிட்டு என்று பறக்குமோ குஞ்சு.
ஃ
சேமிப்பை கற்றறியவில்லை இன்னும்
மழைநேரம் இரைதேடி தவிப்போடு
பறக்கும் குருவி.
ஃ
இது சாத்தியமில்லாதது!….
எந்தக்கல்லூரியில் பொறியியல் பயின்றது?…
தொங்கும் தூக்கணாங்குருவி கூடு.
ஃஃஃ
1 மறுமொழி
பெப்ரவரி 11, 2008 இல் 8:45 மு.பகல் (அ,ஆ...கவிதைகள்)
Tags: Alphabetic Kavithai, அகரவரிசைக் கவிதை
அசுணம் அறியும் இசையின் தன்மை
ஆண்மா அறியும் உயிரின் மெய்மை
இரவுக்குத் தெரியும் இழி செய்து
ஈனமாய் உடல்வார்க்கும் ஊனர் கயமை
உதிரம் உரையும் குளிரில் உறக்கமின்றி
ஊனின்றி காப்பவன் அறிவான் நாட்டினருமை
எறும்புக்குத் தெரியும் உழைப்பின் பெருமை
ஏர்உழவனுக்குத் தெரியும் வியர்வையின் அருமை
ஐயுணர்வு மிக்கார் உள நிலைமை
ஒரு போதும் தாழாத வளமை
ஓர்பு குறைக்கும் சிறுமை
ஔடதம் அழிக்கும் உடலின் நோய்மை.
ஃஃஃ
இந்த இடுகையின் மீதமுள்ள பகுதியை படிக்கவும் »
கருத்துத் தெரிவிக்கவும்
பெப்ரவரி 2, 2008 இல் 8:11 மு.பகல் (உணர்வுகள், சமுதாயம்)
Tags: கவிதை, சுதந்திரம், Independence, Kavithai
எரிமலை வெடிக்கட்டும் இதயம் துடிக்கட்டும்
சுதந்திர தாகம் பிறக்கட்டுமே…
சூழ்ச்சிகள் அழியட்டும் துன்மதி ஒழியட்டும்
சுதந்திரம் இன்றே விடியட்டுமே…
மனிதராய்ப் பிறந்தோம் மதியுடன் வளர்ந்தோம்
மதம் கொண்ட இன வெறிகொண்ட
மனிதன் அடக்கிட நினைப்பது சரிதானோ…
மண்புழுவென நாமும்மடிதல் முறைதானோ…
சுகம்பெற வாழ்வினில் இன்பம் துய்த்திட
சுரத்தினை இழப்பதும் சரியோ?…
சிரத்தினை தாழ்த்தி சீருடல் குறுக்கி
சீர்கெட வாழ்வது தகுமோ?…
பிறப்பது ஒருமுறை இறப்பதும் ஒருமுறை
பசலையாய் வாழ்வதுவா நிறை
பறவையாய் பறந்து சுதந்திரக் காற்றை
பழகிடல் தானே முறை.
வா…வா… தோழா வா…வா…
தீப்பந்தம் எடுத்து வீணே சுணங்கும்
உளத் திரியினை கொழுத்து…
சுதந்திரதீபம் ஒளிரட்டும் தீமைகள் எரியட்டும்
நாளையப்பொழுது நமதாய் விடியட்டும்.
ஃஃஃ
2 மறுமொழிகள்
பெப்ரவரி 1, 2008 இல் 11:42 பிற்பகல் (நட்பு)
மணமகன் அந்தக் குலமகன் வான்பொழியும் நீராகட்டும்
மணமகள் அந்தக் குலமகள் பொறுமையில் பூமகளாகட்டும்
இருவரும் இணையும் இல்லறமெனும் நல்லறம் இனி
இருவரையும் இணைத்து பிரிவறியா செம்புல நீராகட்டும்
இருவரும் இணைந்த ஒருமன சிந்தனையால் இனிவரும்
சந்ததியும் உய்த்து நலம்காணட்டும் நாட்டின்நலன் பேணட்டும்.
ஃஃஃ
4 மறுமொழிகள்