காதல் மட்டும் அல்ல வாழ்க்கை

எந்த கணம் என்ன வரும் யார் அறிவாரோ
எந்த பெண்ணும் இவ்வுலகில் நிலைத்த மனம் கொண்டிருப்பாளோ
காற்றின் திசை எந்த நாளும் நிலைத்து நிற்குமோ
கன்னியரின் மனது மட்டும் இயற்கையை வென்று நிற்குமோ. (எந்த…)

காதல் வந்துதான் மனம் கனிந்து நின்றது
பெண்பூவைச் சுற்றியே மனம் வண்டாய் பறந்தது
தேகம் ஒன்றியே தினம் சுகத்தை தின்றது
போதை விட்டபின்னும் காதல் புலம்பல் நீண்டது

இரவைவென்ற பின்னும் காதல் பகலைத் தின்றது
இணைத்த உள்ளம் இரண்டும் உயிரில் கலந்தது
இதயத்தோடு இதயம் மலரின் மணமாய் நின்றது
இருக்கும் திசையெங்கும் காதல் பரவிச் சென்றது (எந்த…)

காதல் மட்டும் அல்ல வாழ்க்கை என்பது
மோகம் விட்ட பின்னே ஞானம் வந்தது
தூறல் விட்டபின்னே வானில் உதயம் வந்தது
வைய வாழ்வில் சிந்தை தெளிவு கண்டது (எந்த…)
ஃஃஃ

Follow

Get every new post delivered to your Inbox.