ஆறறிவு மனிதன்
ஓரறிவு குறைந்து
ஆட்டு மந்தையென
ஆகாதார் பின்செல்லும்
மடமை ஒழிந்திட
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.
ஃ
பணத்தில் மோகம்கொண்டு
பாசம் துறந்துநின்று
பகைமை வளர்க்கும்
பாதக உள்ளம் நீங்கி
பசுந்தளிரென பாசம் வளர்க்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.
ஃ
உள்ளத்தில் குறுகி
உற்றாரோடு பகைவார்த்து
உறவினரை ஒதுக்கிவாழும்
ஊன உள்ளம் நீக்கி
உலகமதை நேசித்துவாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.
ஃ
சொந்தமற்ற பொருள்
சொந்தமாக்கிக் கொள்ள
சிந்தை பிறழ்ந்து
சீர்கெட்டு வாழும்
சிறுவாழ்வு துறந்து சிறக்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.
ஃ
கடமையை மறந்து
கள்வனைப் போல்
கண்டவரிடத்தும் பொருள்பறிக்கும்
கயமை உள்ளம் கனிந்து
கண்ணியமாய் வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.
ஃ
துன்மதியோர் செயல்கண்டு பயந்து
துன்பத்தில் தோய்ந்து நடுங்கும்
துயரநிலை களைந்து
துணிவாய் தலைநிமிர்ந்து
துலாபாரமாய் நாளும் வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.
ஃ
பாசத்தை பாலாக்கி
பசிபோக்கி வளர்த்த
பாச தெய்வங்களை வெறுக்கும்
பச்சோந்தி மனதைமாற்றி
பாசப்பிள்ளைகள் நாங்களென்று காட்ட
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.
ஃ
தன்னலம் கொண்டு
தரணி நலன்மறந்து கருமியாய் வாழும்
தற்குறி எண்ணம் மாற்றி
தாயாய் எல்லோர்க்கும்
தந்துவாழும் வாழ்வு வாழ
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.
ஃ
உயர்வு தாழ்வு பேதமை
உள்ளத்தில் வளர்த்து
உலகமக்களை பிரித்துப் பார்க்கும்
உதவாத எண்ணமகற்றி
உத்தமராய் யாவரையும் ஒன்றாய்ப்பார்க்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.
ஃ
சாதிகள் பலபேசி
சண்டைசெய்து சிறுத்துமாயும்
சாக்கடை வாழ்வு அகற்றிட
சபதம் மனதில் ஏற்று
சான்றோராய் சிறக்க
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்.
ஃ
மதங்கள் கூறும்
மாட்சிமை மறந்து
மானிடம் துறந்து
மதம்பிடித்து சண்டையிட்டு மாயும்
மனங்கள் மாற
மனதில்
புரட்சிப் பூக்கள் மலரட்டும்..
ஃஃஃ